UPDATED : ஏப் 21, 2026 02:46 PM
ADDED : ஏப் 21, 2026 02:49 PM

சென்னை:
பள்ளிக் கல்வித்துறை சார்பில், தனியார் பள்ளிகளுக்கான தரம் உயர்த்துதல் மற்றும் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2023க்கு முன் தொடங்கப்பட்ட, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த, தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல், 2023க்கு முன் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு, மூன்றாண்டுகள் என்பது ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மூன்று முறை, முறையாக அங்கீகாரம் பெற்று, விதிகளை முறையாக பின்பற்றும் பள்ளிகள் விரும்பினால், 20 ஆண்டுகளுக்கான அங்கீகார சான்றிதழை பெற முடியும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் 3,000; நடுநிலைப் பள்ளிகள் 5,000; உயர்நிலைப் பள்ளிகள் 6,000; மேல்நிலைப் பள்ளிகள் 10,000 ரூபாய் ஆய்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளில், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக் கூடாது. பள்ளியில் நிலம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்பு துறை சான்று, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட விபரங்களை சரி பார்த்தல் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

