UPDATED : ஜூன் 02, 2026 04:33 PM
ADDED : ஜூன் 02, 2026 04:34 PM
திருப்பூர்:
இந்தக் கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், பயிற்சி பெற்ற மாவட்ட பயிற்றுநர்கள் மூலம் வட்டார அளவிலான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. திருப்பூர், ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம், காங்கயம், பொங்கலுார் ஆகிய பகுதிகளிலும் இப்பயிற்சி துவங்கப்பட்டது.
திருப்பூர் நொய்யல் வீதியில் நடந்த பயிற்சி வகுப்பில், வெங்கமேடு தொடக்கப்பள்ளி ஆசிரியரும், பயிற்றுநருமான சித்ரா பேசியதாவது:
பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டுப் பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய பாடம் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், எளிதில் உணரும் வகையிலும் வழிவகுக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக ஆடல், பாடல், மனப்பாடம் கலந்ததாகப் பாடங்கள் இருக்கும். ஆனால், புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்கள் அனுபவத்தில் புரிந்ததை, அவர்களிடம் இருந்து வரும் விடைகளாக, வார்த்தைகளாக, புதிய சொற்களாகப் பெற்று, அதைக் கரும்பலகையில் எழுதிப் படிக்கச் செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறிய வயதில் இருந்தே அனுபவக் கல்வி கற்றுத்தருவதன் வாயிலாகக் குழந்தைகளின் பயம் நீங்கும். 'நாம் சொல்வதைக் கூட ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்' என்ற எண்ணம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தைத் துாண்டும். திரும்பத் திரும்பப் படிக்க வைக்க வேண்டும்; அதை எழுதச் செய்து மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையே புதிய பாடத்திட்டம் சொல்கிறது.
