UPDATED : ஆக 26, 2026 06:31 PM
ADDED : ஆக 26, 2026 06:33 PM
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி. ரவி பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் பொறுப்பு துணைவேந்தராக ஜே. ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜி.ரவி தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் துணைவேந்தர் ரவி பதவி காலம் கடந்த ஆக., 21ம் தேதி நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினரும் அறிவியல் புல முதன்மையருமான ஜே. ஜெயகாந்தன் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் உயிர்த்தகவியல் மற்றும் பிற அறிவியல் துறைகளில் பாடத்திட்ட ஆய்வு வாரிய தலைவராகவும், அழகப்பா பல்கலை சர்வதேச உறவுகள் மைய இயக்குனர், அழகப்பா பல்கலை தரவரிசை பிரிவு இயக்குனராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
துணைவேந்தர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் பல்கலை ஆட்சி குழு உறுப்பினர்கள் வேதி ராஜன், பாலமுருகன், வசீகரன், பல்கலைப் பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு மற்றும் பேராசிரியர்கள் நிர்வாகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
