அரசு பள்ளி மாணவர்கள் 127 பேருக்குநீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
அரசு பள்ளி மாணவர்கள் 127 பேருக்குநீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
UPDATED : ஏப் 30, 2026 05:32 PM
ADDED : ஏப் 30, 2026 05:34 PM
நாமக்கல்:
நாடு முழுவதும் இளநிலை மருத்துவர் படிப்புகளான (எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,) போன்ற படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது. 'இந்தாண்டு தேர்வு வரும், மே 3ல் நடக்கும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில், 4,471 மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்காக, மாவட்டம் முழுவதும், 11 மையங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் படித்து, வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மருத்துவ படிப்பில் சேர, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் வெற்றிபெற, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இலவச பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த, 127 மாணவ, மாணவியருக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என, இரண்டு மையங்களில், மாவட்ட கல்வித்துறை சார்பில், 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

