‘உயர்கல்வி பயில்வோர் அதிகரிக்க 302 புதிய பல்கலைக்கழகங்கள் தேவை’
‘உயர்கல்வி பயில்வோர் அதிகரிக்க 302 புதிய பல்கலைக்கழகங்கள் தேவை’
UPDATED : ஆக 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மாநில தொழில் மற்றும் உயர்கல்வி அமைச்சர்களின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், உயர்கல்வி தொடர்பான பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது பேசிய மாநில உயர் கல்வி அமைச்சர்கள் பலர், உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழங்களை உருவாக்க வேண்டும், புதிதாக ஐ.ஐ.டி.,க்கள் அல்லது ஐ.ஐ.எம்.,கள் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் துவக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் உயர் கல்விக்கு, அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் சுக்தேவ் தோரட் கூறியதாவது:
உயர் கல்விக்காக மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இது நல்ல செய்தியே. அதேநேரத்தில், உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கையை தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கை அடைய வேண்டும் எனில், புதிதாக நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களை துவக்க வேண்டும். 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இரண்டு லட்சம் பேர் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் புதிதாக ஒரு பல்கலையை துவக்க வேண்டும். அதன்படி, பார்த்தால், நாட்டிற்கு 302 பல்கலைக் கழகங்கள் தேவை.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு 63 பல்கலைக் கழகங்களும், பீகாருக்கு 32ம், மேற்கு வங்கத்திற்கும் 30ம், மகாராஷ்டிராவிற்கு 20 பல்கலைகளும் அவசியம். அதேபோல், புதிதாக 2,162 கல்லூரிகளும் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு சுக்தேவ் தோரட் கூறினார்.