UPDATED : மே 19, 2026 03:49 PM
ADDED : மே 19, 2026 03:51 PM
சென்னை:
பள்ளிகளில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 80.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான கோப்பில், அமைச்சர் ராஜ்மோகன் நேற்று கையெழுத்திட்டார்.
பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக, ராஜ்மோகன் நேற்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் பொறுப்பேற்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 80.64 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான கோப்பில், ராஜ்மோகன் முதல் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில், 'நபார்டு' திட்டத்தின் கீழ், 56 கோடி ரூபாயில், மாணவர்களுக்கான வகுப்பறைகள், விடுதிகள் கட்ட ஒப்புதல் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
அப்போது, பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
