UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 09:54 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில், கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி வரவேற்றார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, என்.ஐ.ஏ., பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி பங்கேற்று பேசினார். துறை தலைவர் சித்ரா நன்றி கூறினார்.அறிவியல் கண்காட்சியில் முக்கிய தலைப்புகள், அறிவியல், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் என பட்டியலிடப்பட்டது. விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கணிதம் மற்றும் வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகள் வழங்கப்பட்டன.ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் கண்காட்சி நடத்தப்பட்டது. முதல் பிரிவின் கீழ், 264 மாணவர்களை உள்ளடக்கிய, 93 அணிகளுடன், 27 பள்ளிகள் பங்கேற்றன. இரண்டாவது பிரிவில், 19 பள்ளிகள், 118 குழுக்களுடன், 335 மாணவர்கள் பங்கேற்றனர்.மொத்தம், 46 பள்ளிகளை சேர்ந்த, 599 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், மாடி வீட்டு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு படைப்புக் இடம்பெற்றன. பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.
