UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 09:34 AM

இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களின் அடுத்தகட்ட தேடல், பெரும்பாலும் வேலை வாய்ப்பை நோக்கியே உள்ளது. ஆனால், வெகு சில இளம் தலைமுறையினரே, வேலையை தேடுபவராக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலையை வழங்கும் தொழில் முனைவோர்களாக மாற்றம் காண்கின்றனர்.
பட்டம் பெற்ற உடனே, பலராலும் தொழில் முனைவோர் ஆக வருவது கடினம் என்றாலும், தங்களது வாழ்நாளின் ஒரு கட்டத்தில் தொழில்முனைவோர் ஆக உயர வேண்டும். வேலை வாய்ப்பை பிறருக்கு அளிக்கும் இடத்தில் இருக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், மன திருப்தியும் அத்ததைய தருணத்தால் மட்டுமே உணர முடியுமே தவிர, வார்த்தைகளால் அல்ல...
செயல்முறை அவசியம்
தியரியை மனப்பாடம் செய்யும் முறையை மட்டும் கொண்டிருப்பது முழுமையான கற்றல் ஆகாது. தியரியாக படித்தவற்றை செயல்முறையில் பயன்படுத்தும் போதுதான் கற்றல் முழுமை அடைகிறது. எந்த ஒரு துறையிலும் ஆழ்ந்து பயணப்படும்போது தான், அதன் உள்ளார்ந்த சாராம்சம் மற்றும் ஏராளமான சிறப்பு கிளைகள் உள்ளதை உணர முடியும்.
ஏராளமான வாய்ப்புகள் நிறைந்திருப்பதை, மாணவர்கள் உணரும் வகையில், அவர்களது கண்ணோட்டத்தை விரிவாக்குவதே வகுப்பறைகள். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிப்பது மிக அவசியமானது. கல்வி நிறுவனங்களும் சரி, மாணவர்களும் சரி தங்களது தரத்தை எக்காரணம் கொண்டும், எப்போதும் குறைத்துக் கொள்ளக்கூடாது.
மகிழ்ச்சியும், திறன்களும்
கல்லூரி காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே தருணம், வாழ்க்கையை வழி நடத்த தேவையான திறன்களையும் இளம் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முழுமையான வாழ்க்கையை வாழ, சக இளைஞர்கள் நிறைந்திருக்கும் வகுப்பறைகள், புத்தகங்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த கல்வி நிறுவன வளாகங்களில் முடிந்த அளவு நண்பர்களையும், திறன்களையும் பெருக்கிக்கொள்ள வேண்டும். வேலையை பெறுபவராக இல்லாமல், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக வளம்வர முயற்சி செய்ய வேண்டும்.
அவ்வாறு ஏராளமான தொழில்முனைவோர்களை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிட்ட அங்கம் வகிக்கும் நோக்கில், அகமதாபாத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.