UPDATED : மே 13, 2026 03:33 PM
ADDED : மே 13, 2026 03:33 PM
திண்டுக்கல்:
“மாவட்ட, வட்டார வழிகாட்டி குழுக்கள் மூலம் உயர்கல்விக்கான சேர்க்கையை 100 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக” கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர தேவையான வழிகாட்டுதல்கள் வழங்க மாவட்ட, வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இக்குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரி முதல்வர் சுதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிமளா, அமுதா முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசியதாவது:
மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும். குறிப்பாக அரசு கல்வி நிறுவனங்களில் சேர முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
உயர்கல்வி பயில உதவி தேவைப்படும் தகுதியான மாணவர்களின் விவரங்களை தொகுத்து வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பினால் 2025ல் 82 சதவீதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 26ல் 99 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலை இந்தகல்வி ஆண்டில் 100 சதவீதமாக உயர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.
