UPDATED : மே 05, 2026 06:41 PM
ADDED : மே 05, 2026 06:43 PM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த நீட் தேர்வில் 170 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் நேற்று மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு நடந்தது. பி.எம்.ஸ்ரீ., கேந்திரிய வித்யாலயா பள்ளி, கே.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப் பள்ளி, எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 3246 பேருக்கு 6 மையங்கள் ஒதுக்கப்பட்டது.
நேற்று காலை 11:00 மணி முதல் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவறை சரிபார்க்கப்பட்டு உடைகள் பரிசோதிக்கப்பட்டது. வாட்ச், அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், முழுக்கை சட்டை, பெல்ட், காப்பு, கம்மல் ஆகிய அணிகலன்களுக்கு அனுமதி இல்லை.
வெளிப்படையான தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இச்சோதனைகளால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பரிசோதனைக்கு பின் தேர்வர்கள் உள்ளே சென்றனர். மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 720 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வை 3076 மாணவர்கள் எழுதினர், 170 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மேலும் அண்டை மாவட்டங்களில் இருந்து பலர் கார் உள்பட வாகனங்களில் தேர்வு எழுத வந்தனர். மையங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்கள் ரோட்டின் ஓரங்களில் நிறுத்தப்பட்டது.
