UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 06:02 PM
சென்னை:
சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயிலும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம் கட்ட, நேற்று, அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தங்கும் விடுதி, 464 அறைகளுடன் கட்டப்பட உள்ளது. இதில், 2.53 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளத்துடன் 14 தளங்களில் பார்வையாளர்கள், மருத்துவர்கள், வார்டன்கள், கணினி, சமையல், படித்தல், பொழுதுபோக்கு அறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைகின்றன. இதற்கான, திட்ட மதிப்பீடு, 132.24 கோடி ரூபாயாகும்.அதேபோல், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு, 64.90 கோடி ரூபாய் செலவில், 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளத்துடன் 13 தளங்களில், பல்வேறு வசதிகளுடன், 274 அறைகள் அமைய உள்ளன. 1,500 மாணவர்கள் தங்கி பயில்வதற்கு வசதியாக, இந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.மூன்று ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள், 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.

