தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!

கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!

கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!


UPDATED : ஜன 06, 2016 12:00 AM

ADDED : ஜன 06, 2016 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2016 12:00 AM ADDED : ஜன 06, 2016 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்
: வீட்டு பாடங்களை செய்யாத, 5ம் வகுப்பு மாணவன், ஆசிரியருக்கு பயந்து, தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக கூறி, போலீசையே கிறுகிறுக்க வைத்து உள்ளான்.

வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த மடவாளம் அகரம் பகுதியில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றான். 9:45 மணியளவில், யாரோ ஒருவருடைய, மொபைல் போனில் இருந்து, தன் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசினான். யாரோ இருவர், என்னை பைக்கில் கடத்திச் சென்றுவிட்டனர்; காப்பாற்றுங்கள்... என்று சொல்லி, இணைப்பை துண்டித்து விட்டான். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், உடனடியாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஏரிக்கரையில் மாணவன் இருப்பது தெரியவந்தது.

போலீசார் மீட்புபிற்பகல், 1:00 மணியளவில், மாணவனை மீட்ட போலீசார், அவனிடம், யார்? எப்படி கடத்தினார்கள் என்பதை நடித்துக் காண்பிக்க வேண்டும் என, கேட்டனர். 

அதற்கு, அந்த மாணவன் கூறியதாவது:

ஏரிக்கரை அருகே, என்னை பைக்கில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர், என்னிடம் பேச்சு கொடுத்து, கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றிக் கொண்டனர். பைக் பின்னால் அமர்ந்திருந்தவர், என் சைக்கிளை துாக்கி கொண்டு பயணம் செய்தார். சிறிது துாரம் சென்றபோது, பைக் ஓட்டியவருக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. உடனடியாக, என்னை கீழே இறக்கி விட்டனர். தவறாக உன்னை கடத்தி விட்டோம் என்று கூறி விட்டுச் சென்றனர்.

பின், அந்த வழியாக சென்ற ஒருவரிடம், மொபைல் போன் வாங்கி, என் தந்தையை தொடர்பு கொண்டேன். இவ்வாறு பாவனைகளோடு, மாணவன் நடித்து காட்டினான். வாகன பதிவு எண்கடத்தல் பைக் பதிவு எண்ணையும் கூறினான். மாணவன் சொன்ன வாகன பதிவு எண்ணை சோதனை செய்தபோது, அந்த வாகனம் மாணவனின் உறவினருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகன உரிமையாளரை தொடர்பு கொண்ட போது, வெளியூருக்கு சென்று இரண்டு நாட்கள் ஆகிறது என்று கூறியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், மாணவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதற்கு அந்த மாணவன், கடந்த சில நாட்களாக அரையாண்டு விடுமுறையில், வீட்டு பாடங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டேன். பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் திட்டுவார் என்பதால், அவருக்கு பயந்து இதுபோல் செய்து விட்டேன். சாரி பார் த டிஸ்டர்பன்ஸ், உங்க டைமை நான் ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன்..என, பயப்படாமல் சொல்லியிருக்கிறான்.

மாணவனின் இந்த பதிலைக் கேட்ட போலீசாருக்கு, தலை கிறுகிறுத்தது. சிறுவன் என்பதால், சமாளித்தபடி, அறிவுரை சொல்லி தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us