கடலூர் மாவட்டத்தில் 9,051 மாணவர்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பில் லேப்டாப் வழங்கல்
கடலூர் மாவட்டத்தில் 9,051 மாணவர்களுக்கு ரூ.16.75 கோடி மதிப்பில் லேப்டாப் வழங்கல்
UPDATED : ஜன 06, 2026 07:23 PM
ADDED : ஜன 06, 2026 07:23 PM
கடலூர்:
கடலூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு 16.75 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்டாப் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் துவக்கி வைத்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்கீழ், மாநிலம் முழுதும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணியை காணொலி காட்சியில் துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, கடலூர் டவுன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9,051 கல்லூரி மாணவர்களுக்கு, 16.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான லேப்டாப் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
மாணவர்கள் நலன் கருதி விலையில்லா மிதிவண்டி, புத்தகங்கள், காலை சிற்றுண்டி, அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 18,500 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8,228 மாணவர்களுக்கு ரூ.15.22 கோடி மதிப்பிலும், 3 அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவர்களுக்கு 1.52 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 28 கல்லூரிகளில் பயிலும் 9,051 மாணவர்களுக்கு 16.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லேப்டாப் வழங்கப்படுகிறது. 2ம் கட்டமாக 136 தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார்.
நிகழ்ச்சியில் துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
