ஏப்ரல் 12ம் தேதி ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஏப்ரல் 12ம் தேதி ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
UPDATED : செப் 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வருகிற நவம்பர் 19ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 24ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்கள் நவம்பர் 8ம் தேதி எம்பிளாயிமெண்ட் நியூஸ் இதழில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஒரே நாளில் இரண்டு கட்டமாக இரண்டு மூன்று மணி நேரம் கொண்ட தேர்வுகள் நடத்தப்படும். வரும் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் ஏப்ரல் 12ம் தேதி காலையில் 9 மணி முதல் 12 மணி வரையிலும் அதே நாளில் பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் அப்ஜெக்டிவ் முறையில் இந்த நுழைவுத் தேர்வுகள் இருக்கும்.
நமது நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற இன்ஜினியரிங் கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி., இந்தக் கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, தில்லி, கவுகாத்தி, கான்பூர், கரக்பூர், தில்லி, ரூர்க்கி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆ டெக்னாலஜி, தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகிய ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
சுமார் ஆறாயிரம் இடங்களுக்கு நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதிலிருந்தே இக்கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
