கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டால் அறிவு வளரும்: தினமலர் ஆசிரியர் பேச்சு
கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டால் அறிவு வளரும்: தினமலர் ஆசிரியர் பேச்சு
UPDATED : ஜன 19, 2009 12:00 AM
ADDED : ஜன 19, 2009 01:23 PM
ரீச் பவுண்டேஷனும், எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லூரி நாட்டியத் துறையும் இணைந்து நடத்திய தமிழ்க் கல்வெட்டுக் கற்றல் விழா, அக்கல்லூரியில் நேற்று நடந்தது. தினமலர் ஆசிரியர் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. மத்திய அரசின் கீழ்வுள்ள தொல் எழுத்துத் துறையிடம் 75 ஆயிரம் கல்வெட்டுக்கள் படியெடுத்து வைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு படிப்பதில் எனக்குள்ள ஈடுபாடு ஒரு வியக்கத் தக்கதாகத் தான் கருத வேண்டும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த பின் தந்தை நடத்திய பத்திரிகையில் பணியாற்ற முற்பட்டேன். 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாளேட்டின் பக்கங்கள் கையால் தான் அச்சுக் கோர்க்கப்பட்டது. ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும்போது வேகமாக அச்சுக் கோர்க்கலாம். ஆங்கில மொழிக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு. தமிழ் மொழிக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகம். இதனால் நேரம் அதிகரிக்கும். கடினமான வேலையாகவும் இருக்கும்.
பெரியார் அவர்களின் விடுதலை நாளேட்டில் எழுத்துச் சீர்மை செய்யப்பட்டிருந்தது. அச்சீர்மை சரியானது என்று உணர்ந்தேன். அதை செயல்படுத்துமுன், தமிழ் எழுத்துக்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் பிராமி எழுத்துக்களைக் கற்றேன். அதன்பின் வந்த வட்டெழுத்துக்களைப் படித்தேன்.
மூன்று நூல்கள் எழுதினேன். அந்த ஆராய்ச்சியின் காரணமாக எனக்குத் துணிச்சல் ஏற்பட்டது. பெரியார் செயல்படுத்திய எழுத்துச் சீர்மையை 1977 ஆம் ஆண்டு திருச்சி தினமலர் நாளிதழில் புகுத்தினேன். ஆரம்பத்தில் சிறு எதிர்ப்பு இருந்தாலும் பிறகு வெற்றி கிடைத்தது. உற்பத்தி இரண்டு மடங்காக கூடியது. அதிகம் கல்வி கற்காதவர்கள் எளிதாகப் படிக்கத் துவங்கினர். எம்.ஜி.ஆர்., அரசு பிறகு தான் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தியது.
தமிழ் பிராமி எழுத்து முறை கற்றதின் காரணமாக, மதுரையில் கிடைத்த சங்க கால நாணயத்தில் பெருவழுதி என்ற பெயர் இருப்பதைப் படிக்க முடிந்தது. 1984 ஆம் ஆண்டு அக்காசு கிடைத்தது. சங்க கால பாண்டிய மன்னன் வெளியிட்டது. இந்த நாணயம் தான் சங்க கால நாணய வரலாற்றுக்குத் திறவுகோல். கரூரில் இதுபோன்ற சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகளை முதன் முதலாகக் கண்டுபிடித்தேன். 1987 ஆம் ஆண்டு அது நிகழ்ந்தது.
என் தொன்மை எழுத்து அறிவின் காரணமாக 1987 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்கான சாப்ட்வேர் தயார் செய்தேன். புனேயிலுள்ள ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் உதவி செய்தார். உலகெங்கும் இந்த சாப்ட்வேர் இப்பொழுதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேலைக்கு நான் எந்த காப்புரிமையும் பெறவில்லை. தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற எண்ணத்தில் தான் செய்தேன். கல்வெட்டுத் துறையில் ஆராய்ச்சி செய்தால் வாழ்வில் நன்மை பயக்கும்; பல வெற்றிகள் கிடைக்கும். கல்வெட்டு ஆராய்ச்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபடுவதால் ஆங்கிலம், தமிழ், வரலாறு என்ற பாடங்களிலும் அறிவு பெருகும்; திறமையும் வலுப்பெறும். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
ரீச் பவுண்டேஷன் நிறுவனர் தியாக.சத்தியமூர்த்தி பேசியதாவது: நாட்டில் உள்ள புராதன சின்னங்கள், கல்வெட்டுக்கள் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பழங்கால சின்னங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. குறிப்பாக எந்த தேதியில் எப்படி, யாரால் கட்டப்பட்டது என்ற புள்ளிவிவரம் இல்லை.
இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அதில் 65 ஆயிரம் தமிழ்க் கல்வெட்டுக்கள். திருப்பணி என்ற பெயரில் கோவில்களில் காணப்படும் கல்வெட்டுக்களை அழிக்கக் கூடாது. கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் மொழியை பாமரனையும் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் அறிவும், கல்வெட்டு அறிவும் பெருகும். தமிழ் மொழி பெருமை அடையும். இவ்வாறு தியாக.சத்தியமூர்த்தி பேசினார்.
கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், தொல்லியல் துறை, கல்வெட்டுத் துறை, நாணவியல் துறையின் ஆய்வாளர்களுக்கு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ரோல் மாடலாக விளங்குகிறார், என்றார். விழாவில் சந்திரசேகரன், டி.கே.வி.ராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், நாட்டிய ஆசிரியையான நடிகை சொர்ணமால்யா கணேஷ் நன்றி கூறினார்.
