சிவில் சர்வீஸ் பணியில் பிளஸ்2 படித்தவர்களை அனுமதிக்க பரிசீலனை!
சிவில் சர்வீஸ் பணியில் பிளஸ்2 படித்தவர்களை அனுமதிக்க பரிசீலனை!
UPDATED : ஜன 19, 2009 12:00 AM
ADDED : ஜன 19, 2009 03:17 PM
வீரப்பமொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் இதுகுறித்த பரிந்துரையை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் சிவில் சர்வீஸ் பணியில் சேருவதற்கு பட்டம் பெறும் வரை காத்திருக்க வேண்டியதிருக்காது. பிளஸ்2 தேர்ச்சி பெற்றதுமே சிவில் சர்வீஸ் பணியில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
பிளஸ்2 முடித்த மாணவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள், சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று ஆண்டு படிப்பில் சேர்க்கப்படுவார்கள். பள்ளியில் தேர்ச்சி பெற்ற நிலையிலேயே சிவில் சர்வீஸ் பணிகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது அந்தப் பணிகளில் சேருவதற்கு உரிய திறமையுடையவர்களாக வளர்க்க முடியும் என்று மொய்லி தெரிவித்தார்.
என்.டி.ஏ., போன்று அகில இந்திய தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படும். தேசிய அளவில் நடத்தப்படும் இதுபோன்ற தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, நேஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆப் பப்ளிக் அட்மின்ஸ்ட்ரேஷன் (என்.ஐ.பி.ஏ.,) கல்வி நிலையத்தில் மூன்று ஆண்டுப் படிப்பை வழங்க வேண்டும். பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் மூன்று ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை என்.ஐ.பி.ஏ., வழங்க வேண்டும். சிவில் சர்வீஸ் பணியில் சேருவதில் விருப்பம் இல்லை என்றால், தங்கள் விருப்பம் போல வேறு இடங்களில் படிப்புகளில் சேருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
படிப்புக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வு இருக்கும். இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும். இப்படிப்பை முடித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர விரும்பினால், அந்தப்பணிகள் வழங்கப்படும். குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். ஐ.பி.எஸ்., பணியில் சேர விரும்புபவர்கள் எஸ்.வி.பி.என்., கல்வி நிலையத்திலும் ஐ.ஆர்.எஸ்., பணியில் சேருபவர்கள் என்.ஏ.டி.டி., கல்வி நிலையத்திலும் பயிற்சி பெற வேண்டும்.
பட்டப் படிப்பின் முடிவில் நடத்தப்படும் இறுதித் தேர்வு அடிப்படையில் ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும். ரேங்க், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். பிளஸ்2 மாணவர்களுக்கான சிவில் சர்வீஸ் இந்த நுழைவுத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.,) நடத்தும் என்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
