UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:18 PM
சென்னை, டில்லி, மும்பை உட்பட எட்டு இடங்களில் ஐ.ஐ.டி., என்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இயங்கி வந்தது. இத்துடன் மேலும், எட்டு இடங்களில் ஐ.ஐ.டி.,க்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி.,யில், படிக்க சீட் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு. என்ன தான் அதிக மதிப்பெண் பெற்றாலும், ஐ.ஐ.டி.,க்கான கூட்டு நுழைவுத்தேர்வில் சாதிப்பது மிகவும் கடினம். அதையும் தாண்டி, சாதிக்கும் மாணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதே சமயம், ஐ.ஐ.டி.,யில் சீட் கிடைத்தாலும், எதிர்காலத்தில் தனக்கு நல்ல வாய்ப்பு இருக்குமா, மேலும் சாதிக்க முடியுமா, திறமையான பேராசிரியர்கள் இருக்கின்றனரா என்பதை எல்லாம் மாணவர்கள் சீர்தூக்கி பார்த்துத்தான் அட்மிஷனை பெற்றுக்கொள்கின்றனர். இதன்படி, இந்தாண்டு முதன் முறையாக 505 மாணவர்கள், தங்களுக்கு கிடைத்த ஐ.ஐ.டி., அட்மிஷனை, வேண்டாம் என்று கூறி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் எந்த ஐ.ஐ.டி.,யிலும் பெரிய அளவில், சீட்டை புறக்கணிப்பது இல்லை. ஆனால், இந்த முறை தான் மிக அதிகமான அளவில் மாணவர்கள் நிராகரித்துள்ளனர். இந்த 505 சீட்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடத்தி விட்டது ஐ.ஐ.டி., புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி.,க்கள் தற்காலிக கட்டடத்தில் தான் உள்ளன. மற்ற பழமையான ஐ.ஐ.டி.,க்கள் போல இல்லையே என்ற வருத்தம் மாணவர்களிடம் உள்ளது. அதனால் தான் இந்த மாணவர்கள் சீட்டை நிராகரித்துள்ளனர். அடுத்தாண்டு இது போன்ற நிலை இருக்காது என்று எண்ணுகிறோம் என்று, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
