பொறியியல் துணை கவுன்சிலிங்: ஜூலை 29 முதல் விண்ணப்பம்
பொறியியல் துணை கவுன்சிலிங்: ஜூலை 29 முதல் விண்ணப்பம்
UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:34 PM
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், மே 6 முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட்டன. இப்படிப்பிற்கு விண்ணப் பித்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 பேரில், 7,037 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 227 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஜூன் 6ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இம்மாதம் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இம்மாதம் 10ம் தேதி துவங்கிய பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் இன்றுடன் (ஜூலை 29) முடிகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில் 161 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மூன்றுக்கும் குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட உடனடித் தேர்வு முடிவு வெளியானது. ஒரு லட்சத்து ஆயிரத்து 779 பேர் இத்தேர்வை எழுதினர். இதில், 49 ஆயிரத்து 75 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 உடனடித் தேர்வெழுதி பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட் 11ம் தேதி முதல் பொறியியல் துணை கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவில் காலியாக உள்ள இடங்கள், இந்த துணை கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை மையத்தில் 500 ரூபாய் கட்டணம் (எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியினர் 250 ரூபாய் கட்டணம் ) செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 2வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்து, பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களும் இந்த துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
