பி.எட்.,: செப்., 22 வரை திறந்த நிலை பல்கலை விண்ணப்பம்!
பி.எட்.,: செப்., 22 வரை திறந்த நிலை பல்கலை விண்ணப்பம்!
UPDATED : ஆக 06, 2009 12:00 AM
ADDED : ஆக 06, 2009 12:55 PM
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் இரண்டாண்டு பி.எட்., படிப்பில் தமிழ் வழிக் கல்வியில் 500 இடங்கள், ஆங்கில வழிக் கல்வியில் 500 இடங்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு 500 இடங்கள் (தமிழ் வழி 250, ஆங்கில வழி 250) உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 21ம் தேதி முதல் பல்கலைக்கழக அலுவலகம், பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இரண்டாண்டுகள் அனுபவத்துடன் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம், வணிகவியல், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், சமூகவியல், சைக்காலஜி, பிலாசபி, லாஜிக் மற்றும் இந்திய கலாசாரம் ஆகிய படிப்புகளுக்கு முதுநிலை பட்டமும், மற்ற படிப்புகளுக்கு இளநிலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 22ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன.
பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 25ம் தேதிக்குள் பல்கலைக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 22ம் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 9ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
தமிழ் வழி பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் டிசம்பர் 12, 13ம் தேதிகளிலும், ஆங்கில வழி பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் டிசம்பர் 19, 20ம் தேதிகளிலும், உடல் ஊனமுற்றோருக்கான பி.எட்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் டிசம்பர் 14, 15ம் தேதிகளிலும் நடக்கவுள்ளது.
