பள்ளிகளுக்கு வழங்கிய லேப்டாப் தேர்தல் பணிக்காக தாரைவார்ப்பு
பள்ளிகளுக்கு வழங்கிய லேப்டாப் தேர்தல் பணிக்காக தாரைவார்ப்பு
UPDATED : ஆக 06, 2009 12:00 AM
ADDED : ஆக 06, 2009 12:58 PM
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் வகையில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆங்கில பேச்சுப்பயிற்சி மட்டுமின்றி, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சியளிப்பதற்கு வசதியாக ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஐந்து பள்ளிகள் வீதம் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, தொண்டாமுத்தூர், ஸ்ரீ வைகுண்டம், பர்கூர், கம்பம், இளையான்குடி ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில் ஆக., 18ல் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால், தேர்தல் பணிகளை சுலபமாக செய்து முடிப்பதற்காக ஒன்றிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் பெற்றுள்ளது. இதனால், மாணவர்களின் கம்ப்யூட்டர் கல்வி பாதிப்படையும் என தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி பகுதி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தல் நடக்கும் ஐந்து தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், தேர்தல் பணிக்காக லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது தடைபடுகிறது. தேர்தல் பணியாளர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தும்போது லேப்டாப்கள் பழுதடையக் கூடிய வாய்ப்புள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் லேப்டாப்களை கவனமுடன் பராமரிப்பதாகவும், எதிர்பாராதவிதமாக கோளாறு ஏற்பட்டால், சரிபார்த்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். இடைப்பட்ட நாட்களில் அளிக்கவேண்டிய பயிற்சிகளை ஆசிரியர்கள் குறிப்பெடுத்துக் கொண்டு லேப்டாப் திரும்ப கிடைத்தவுடன் மாணவர்களுக்கு அந்தந்த பயிற்சிகளை அளிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என கூறியுள்ளோம். இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
