UPDATED : அக் 10, 2009 12:00 AM
ADDED : அக் 10, 2009 03:13 PM
அ நிறம் | அளவு
இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் நவம்பர்-டிசம்பரில் நடக்கவுள்ளது. கடுமையான போட்டியை உள்ளடக்கிய இத் தேர்வில் லட்சக்கணக்கான போட்டியாளர்களில் கலந்து கொள்கிறார்கள்.
நீண்ட காலப் பயிற்சி, விடா முயற்சி ஆகியவை தான் இத் தேர்வின் தாரக மந்திரங்கள். இத் தேர்வை எழுதுவோர் தவிர்க்கக் கூடியவை என்ன என சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
* தேர்வுக்காக நாம் எந்தப் பகுதிகளில் தயாராகியிருக்கிறோம், எதை விட்டிருக்கிறோம் என்பதான ஆய்வை தேர்வு மையத்தில் வைத்து பேசவோ விவாதிக்கவோ கூடாது. இது தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதோடு நமது மன ஒரு நிலைப்பாட்டையும் பாதிக்கும்.
* தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர் டென்ஷனாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களை விட்டு தேர்வு நாளன்று விலகியே இருப்பது நல்லது.
தேர்வு மையத்திற்கு தேர்வு ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் சென்றால் போதும். தேவையில்லாமல் மிக முன்பாகவே சென்று இது போன்ற நபர்களிடம் பேசினால் நமது நம்பிக்கையை அது குலைப்பதாக அமையலாம்.
* தேர்வு அறையில் நமது இருக்கையைக் கண்டறிவது, அனுமதி அட்டை மற்றும் எழுது பொருட்களை தயாராக வைத்துக் கொள்வது போன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளால் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். தேர்வு விதிமுறைகளை முன்னரே தெளிவாகப் படித்து தேர்வு மையத்தில் எவை எவை அனுமதிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* தேர்வு துவங்குவதற்கு முன் கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பின்னரே தேர்வை எழுதத் துவங்கலாம்.
* தேர்வு துவங்கிய பின் தேர்வு எழுதும் பிறர் மீது உங்கள் கவனம் செல்ல வேண்டாம். இது உங்களுக்கு தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்தலாம்.
* முதல் பார்வைக்கு நமக்கு எளிதாகத் தோன்றும் வினாக்களை அலட்சியப்
படுத்தக் கூடாது. முடிந்த அளவு நமக்கு எளிதாகத் தோன்றும் வினாக்களுக்கு விடையளித்த பின் பிற வினாக்களுக்குச் செல்லலாம்.
* கேட் தேர்வில் கேள்விகள் அதிகம் இடம் பெறுகின்றன. சராசரி மாணவர்களால் இவை அனைத்திற்கும் பதிலளிக்க முடியாது. எனினும் இதுவே ஒருவரின் திறனை அளவிட சரியான முறை என்பதை முதலில் மனதில் கொள்ளுங்கள். எளிதான கேள்விகளுக்கு பதிலளிக்க அதிக நேரம் பிடிக்காது.
தேர்வு எழுதும் போது இத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது போன்ற சிந்தனையை அறவே நீக்குங்கள். தேர்வுக்கான பயிற்சியில்
முழுமையாக இறங்குங்கள். வெற்றி உங்களுக்குத்தான்.
