UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 12:34 PM
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்.டீக்கடையில் வேலை செய்கிறார்.. இவரது மனைவி இளவரசி, கிட்னி பாதித்த நிலையில் வீட்டில் உள்ளார். இவர்களது மகன் பிரபாகரன் (18). அவருக்கு மூன்று வயதாகும்போது, உறவினர் ஒருவர் குடிபோதையில் அவரது கண்ணில் குத்தினார். இதில் பிரபாகரனின் இடது கண்பாதித்து புரையோடியது. இடது கண்ணில் பார்வை குறைந்தது. சில ஆண்டுகள் கழித்து, அறுவை சிகிச்சை செய்தார். இருந்தும், அவரது இடது கண் பார்வை கிடைக்கவில்லை.
அதுவரை, ஊரிலேயே படித்து வந்த பிரபாகரன், கடலூரில் உள்ள ஊனமுற்றோர் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். கண் கண்ணாடி தொலைந்து விட்டதால், கண்ணாடி அணியாமலேயே படித்து வந்தார். இதனால், வலது கண்ணும் படிப்படியாக செயல் இழந்து பார்வை பறிபோனது. இரண்டு கண்ணிலும் பார்வை போனதால் சொந்த ஊரான ஆலவட்டிக்கே சென்று படிப்பைத் தொடர்ந்தார்.
இந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பிற்கு வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு, விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். இநநிலையில் புரையோடிய வலது கண்ணில் வலி அதிகரித்ததாலும் படிப்பு செலவுக்கு பணம் இல்லாததாலும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
