UPDATED : அக் 15, 2009 12:00 AM
ADDED : அக் 15, 2009 01:14 PM
அ நிறம் | அளவு
பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் 100 சதவீதம் வருகைப் பதிவு பெறுவதில்லை என, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற திட்ட இலக்கை அடைவதற்காக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 98.1 சதவீதம் வருகைப் பதிவும், டில்லி மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்கள் முறையே 95 சதவீதம் மற்றும் 91.9 சதவீதம் வருகைப் பதிவும் பெற்றுள்ளனர்.
இதை தவிர மற்ற மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்கள், 70 முதல் 80 சதவீதம் வருகைப் பதிவு பெற்றுள்ளனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்களில், 55.2 சதவீதத்தினர் மட்டுமே, முறையாக வகுப்பிற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இடை நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 86.6 சதவீதம் வருகையும்,தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 89.6 சதவீதம் வருகையும் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று மாணவர்களின் வருகைப்பதிவு குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பீகாரை சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்களில், 42.2 சத வீதத்தினரும், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் 36.8 சதவீதத்தினரும் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். அதே நேரத்தில் இமாச்சல் பிரதேசத்தில், பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இம்மாநிலத்தில், தொடக்க கல்வி மாணவர்கள் 94.6 சதவீதமும், இடைநிலை பள்ளி மாணவர்கள் 93.2 சதவீதம் மாணவர்களும் வருகை தருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த தொடக்க பள்ளி மாணவர்கள் 88.3 சதவீதத்தினரும், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் 87.8 சதவீதத்தினரும் வருகின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
