வரும் 15ல் விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்
வரும் 15ல் விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 11:20 AM
சென்னை:
புவியை கண்காணிக்கும், இ.ஓ.எஸ்., 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., டி3 ராக்கெட், நாளை மறுதினம் காலை, 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோளை செலுத்த, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
175.50 கிலோ
தற்போது இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.50 கிலோ.
ஓராண்டு ஆயுள் காலம் உடைய அதில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை மறுதினம் காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்கோளை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆலோசனை
நாளை மறுதினம் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், அன்றைய தினத்திற்கு பதில், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை அடுத்த நாள் விண்ணில் ஏவலாமா என்பது தொடர்பாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.