UPDATED : ஏப் 05, 2025 12:00 AM
ADDED : ஏப் 05, 2025 09:47 AM
சென்னை:
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், தற்காலிக மதிப்பூதிய யோகா பயிற்சியாளர்களுக்கு, ஒன்றரை ஆண்டுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழக, ஆயுஷ் மையம் வாயிலாக, மத்திய அரசு வழிகாட்டுதலுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிக மதிப்பூதிய யோகா பயிற்சியாளர்களாக ஆண், பெண் இருபாலர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. யோகா பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும், 1 லட்சம் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை, சம்பள நிலுவை உள்ளது.
இந்நிலையில், தமிழக, ஆயுஷ் மையம் சார்பில், கடந்த பிப்., 7ம் தேதி, யோகா பயிற்சியாளர்களை பணியில் இருந்து உடனடியாக நிறுத்தும்படி, அனைத்து மாவட்ட சித்த மருத்துவர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளனர்.
அவர்களுக்கு நிலுவையில் உள்ள, 4 கோடி ரூபாய் சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

