பிளஸ் 2 தோல்வியுற்ற மாணவர்களுக்கு மீண்டும் கை கொடுக்கும் பள்ளிகள்! சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு
பிளஸ் 2 தோல்வியுற்ற மாணவர்களுக்கு மீண்டும் கை கொடுக்கும் பள்ளிகள்! சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு
UPDATED : மே 14, 2026 06:17 PM
ADDED : மே 14, 2026 06:19 PM

மதுரை:
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியுற்ற 1817 மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்பு பயிற்சி அளிக்கவும், கோடை விடுமுறையில் உள்ள ஆசிரியர்களை விருப்பத்தின் பேரில் அழைக்கவும் கல்வித்துறை முதல்முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதில் மாவட்டத்தில் 96.75 சதவீதம் மாணவர் தேர்ச்சி பெற்றனர். மதுரை, மேலுார் கல்வி மாவட்டங்களில் 1817 மாணவர்கள் தோல்வியுற்றனர். 880 மாணவர்கள் ஒரு பாடத்திலும், 252 பேர் இரண்டு, 85 பேர் 3 பாடங்கள், 37 பேர் நான்கு, 6 பேர் ஐந்து பாடங்களில் தோல்வியை தழுவினர். பாடம்வாரியாக ஆங்கிலத்தில் 430, தமிழ் 224, பொருளியல் 295, வணிகவியல் 183, இயற்பியல் 131, வேதியியல் 128 மாணவர் தோல்வியடைந்தனர்.
இவர்களுக்கு மே 29 முதல் துணைத் தேர்வுகள் தொடங்குகின்றன. தோல்வியடைந்த மாணவர்களுக்கு முதல்முறையாக கோடையில் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்கள் முன்வந்து தோல்வி மாணவர்களுக்கு தேர்ச்சியடைய கை துாக்கி விட வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி பள்ளி வாரியாக அல்லது பள்ளிகளை இணைத்து பாடம் வாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கும் நடவடிக்கையில் கல்வித்துறை இறங்கியுள்ளது. பொதுவாக பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்றால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தனியார் மையத்தில் அல்லது வீட்டில் படித்து உடனடி தேர்வை எழுதுவர். ஆனால் மதுரையில் முதல் முறையாக கல்வித்துறையே பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
சி.இ.ஓ., தயாளன் கூறியதாவது:
ஒரு பாடம், இரண்டு பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் தான் அதிகம். அவர்கள் குறைவான மதிப்பெண்ணில் தான் தேர்ச்சியை தவற விட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு மதிப்பெண் உட்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பயிற்சி அளித்தால் உடனடி தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். அவர்களும் சக மாணவர்களுடன் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கோடை விடுமுறையில் ஆசிரியர்களை வரவழைக்க கட்டாயப்படுத்த முடியாது. மாணவர்கள் நலன் கருதி விருப்பம் அடிப்படையில் அசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறப்பு பயிற்சி துவங்கும் என்றார்.
ஆசிரியர்கள் எதிர்ப்பு
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் ராஜசேகர் கூறுகையில், தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது எங்கே இருக்கின்றனர். அவர்களை எவ்வாறு பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை. விடுமுறையில் ஆசிரியர்களை பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் கல்வியாண்டு துவங்கிய பின் தேவையான மறுபயிற்சி, வழிகாட்டுதல் வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தலாம் என்றனர்.
