பிளஸ் 2 செய்முறை தேர்வு: மின்தடையால் தவிக்கும் மாணவர்கள்
பிளஸ் 2 செய்முறை தேர்வு: மின்தடையால் தவிக்கும் மாணவர்கள்
UPDATED : பிப் 05, 2013 12:00 AM
ADDED : பிப் 05, 2013 08:06 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள், மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக அறிவியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு, பிப்., 1ல் துவங்கி உள்ளது.
இந்த ஆண்டும், மாணவர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும், 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் மின்தடை உள்ளது. இதனால் பிளஸ் 2 மாணவர்கள் முழுமையாக தேர்வில் கவனம் செலுத்த முடியாது.
கடந்த ஆண்டு, எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு, ஜெனரேட்டர் பயன்படுத்தி கொள்ள, அரசு அனுமதி அளித்தது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம். எனவே, செய்முறை தேர்வு நடக்கும் மையங்களிலும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இத்குறித்து பிளஸ் 2 மாணவர்கள் கூறுகையில், "மின்தடையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில், செய்முறை தேர்வு நடக்கும் மையங்களுக்கும், எழுத்து தேர்வுக்கும், கடந்த ஆண்டை போல், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும்" என்றனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "மின்தடையால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடந்த மையங்களில், ஜெனரேட்டர் பயன்படுத்தி கொள்ள அரசு உத்தரவிட்டது. அரசு பள்ளிக்கு 45 ஆயிரம் ரூபாய், உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 ஆயிரமும் வழங்கப்படும்" என, அரசு அறிவித்தது.
அரசு பள்ளிகளுக்கு இத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. அரசு உதவி பெறும் பல பள்ளிகளுக்கு, இத்தொகை கிடைக்கவில்லை. இக்குறையை போக்கி, இந்த ஆண்டும், செய்முறை தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என்றனர்.
