வரும் 22-ம் தேதி அழகப்பா பல்கலை துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம்
வரும் 22-ம் தேதி அழகப்பா பல்கலை துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம்
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 01:02 PM
காரைக்குடி: அழகப்பா பல்கலை துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம், வரும் 22-ம் தேதி நடக்க உள்ள நிலையில், இப்பதவியை கைப்பற்ற கல்வியாளர்கள் பலர் களமிறங்கி உள்ளனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக பதவி வகித்த சேது சுடலைமுத்து பதவிக்காலம் கடந்த செப்.26-ல் முடிவடைந்தது. புதிய துணை வேந்தரை தேர்வுசெய்ய துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தலைவராகவும் பல்கலை வேந்தரான கவர்னரின் பிரதிநிதியாகவும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான தியாகராஜன் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய பல முறை சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியும், 11 மாதங்களாக துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் நிலவியது. துணைவேந்தர் இன்றி, பல்கலையில் முக்கிய நிர்வாக முடிவுகள், புதிய பாடத்திட்டங்கள், புதிய துறைகள் தொடங்குவது சம்பந்தமான கொள்கை முடிவுகளில் தேக்க நிலை நிலவியது.
இந்நிலையில், மதுரை பல்கலை துணைவேந்தர் கல்யாணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்துசெய்து, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ள நிலையில், அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் நியமனத்தில் யு.ஜி.சி. விதிகள் பின்பற்றப்படுமா? என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கல்வியாளர்கள் கூறும்போது: துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் கல்வித்துறையில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவராகவும், சமுதாயத்தில் மக்களால் அறியப்பட்டவர்களாகவும் தகுதிவாய்ந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், துறை தலைவர் நிலையில் 10 ஆண்டுகள் பணியாற்றியவராகவும், ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, அதன் பயன், மக்களை சென்றடையும் வகையில் செயல்படுகின்றவர்களாகவும் விளங்க வேண்டும்.
சிறந்த நிர்வாக திறமை உடையவராகவும், அரசியலுக்கு அப்பாற்பட்ட சிறந்த கல்வியாளர்களை துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்றனர்.
இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய வரும் 22-ம் தேதி தேர்வுக்குழு கூட உள்ளதாகவும், இக்கூட்டத்தில், துணைவேந்தர் பதவிக்கு தகுதியுடைய மூவர் பட்டியலை கவர்னருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாகவும், இப்பட்டியலில் உள்ள மூவரில், ஒருவரை கவர்னர் புதிய துணைவேந்தராக வருகிற 25-ம் தேதிக்குள் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணைவேந்தர் நியமனம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், இப்பதவியை கைப்பற்ற கல்வியாளர்கள் சென்னையில் முகாமிட்டு இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவை பாரதியார், மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களில் ஒருவர், இப்பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
