மருத்துவமனைக்கு ரூ.6.45 கோடியில் குடிநீர் வசதி: எம்.பி., ராஜேஸ்குமார்
மருத்துவமனைக்கு ரூ.6.45 கோடியில் குடிநீர் வசதி: எம்.பி., ராஜேஸ்குமார்
UPDATED : மார் 30, 2024 12:00 AM
ADDED : மார் 30, 2024 11:16 AM

நாமக்கல்:
நாமக்கல் யூனியன், தி.மு.க., சார்பில், இண்டியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பங்கேற்று பேசியதாவது:
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டு குடிநீர் வசதி இல்லாமால் கிடப்பில் போடப்பட்டது. அதைதொடர்ந்து, தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே நடவடிக்கை எடுத்த முதல்வர், அதற்கென தனி குடிநீர் திட்டத்தை உருவாக்கி, 6.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பாட்டினால், அனைத்து அறுவை சிகிச்சையும், அவசர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் கருதி மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, 1,000 ரூபாய், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, காலை உணவு திட்டம் ஆகியவை இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கொ.ம.தே.க., தலைவர் தேவராஜன், மாவட்ட துணை செயலாளர் நலங்கில்லி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர்கள் பரிதி, பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சித்தார்த், பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.