தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாணவர்கள் குழப்பம்

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாணவர்கள் குழப்பம்

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாணவர்கள் குழப்பம்


UPDATED : பிப் 05, 2013 12:00 AM

ADDED : பிப் 05, 2013 03:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2013 12:00 AM ADDED : பிப் 05, 2013 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வி நடைமுறைக்குப் பின், கடந்த ஆண்டில் இருந்து, 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில், பாடப் புத்தகம் வினியோகம் மற்றும் பாடம் நடத்த துவங்குவதில் கால தாமதம், தேர்வை நடத்துவதில் குளறுபடி என, தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் நடந்ததால், மார்ச் மாதம் தான், செய்முறைத் தேர்வே நடந்தது.

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் பொதுத்தேர்வு, தொடர் குளறுபடிகளை ஏற்படுத்தியதால், மாணவ, மாணவியர், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இந்த ஆண்டாவது, தேர்வு குறித்த விவரங்களை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுத்தேர்வு தேதியை அறிவித்த தேர்வுத்துறை, 10ம் வகுப்பிற்கு, செய்முறைத் தேர்வு தேதியை, இதுவரை அறிவிக்கவில்லை. இதனால், எப்போது செய்முறைத் தேர்வு நடக்கும் என, தெரியாமல், மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.

செய்முறைத் தேர்வை, விரைவில் நடத்தி முடித்தால், அடுத்து எழுத்து தேர்வுக்கு தயாராக வசதியாக இருக்கும், தேவையற்ற பதட்டம் குறையும் என, மாணவர்கள் கருதுகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர், ஆனந்தன் கூறியதாவது: மாணவ, மாணவியரிடம் இருந்து, ரெக்கார்டு நோட்டுகளை வாங்கி வைத்துள்ளோம். செய்முறைத் தேர்வு, எப்போது நடக்கும் என, தெரியவில்லை.

இம்மாத இறுதிக்குள் நடத்தி முடித்தால் தான், நாங்கள், மாணவ, மாணவியரை, எழுத்து தேர்வுக்கு தயார்படுத்த முடியும். கடந்த ஆண்டைப் போல், காலதாமதம் செய்தால், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவர்.

இம்மாதம், 7ம் தேதி முதல், இரண்டாவது திருப்புதல் தேர்வு நடக்கிறது. மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருந்தோ, மூன்றாவது திருப்புதல் தேர்வை நடத்த வேண்டி உள்ளது.

பிளஸ் 2 தேர்வு துவங்கி விட்டால், பிற்பகலில் தான், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, வகுப்புகள் எடுக்க முடியும். கடைசி நேரத்தில், தேர்வுக்கு தயாராவதில் தான், மாணவ, மாணவியரின் கவனம் இருக்கும். எனவே, செய்முறைத் தேர்வை, விரைந்து நடத்த, தேர்வுத்துறை முன்வர வேண்டும். இவ்வாறு, ஆனந்தன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us