UPDATED : ஏப் 24, 2025 12:00 AM
ADDED : ஏப் 24, 2025 10:18 AM
 ஊட்டி: 
உலக புத்தக தினத்தை ஒட்டி, ஊட்டியில், 1,000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தனர்.
ஊட்டி மாவட்ட மைய நுாலகம், நுாலக வாசகர் வட்டம் இணைந்து, உலக புத்தக தின நிகழ்ச்சியை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
அதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் என 1,000 பேர் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து ஒரு மணி நேரம் அமைதியாக புத்தகம் வாசித்தனர்.
மாவட்ட மைய நுாலகர் ரவி கூறுகையில், மாணவர்கள், பொதுமக்கள் இடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். உலக புத்தக தினத்தை ஒட்டி, 1,000 பேர் பங்கேற்கும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். அனைவரும் ஆர்வமாக புத்தகங்களை கொண்டு வந்து வாசிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, டாக்டர் ராமன், மக்கள் சட்ட மைய இயக்குனர் வக்கீல் விஜயன், வாசக வட்ட தலைவர் அமுதவல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.

