UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 07:45 AM

சென்னை:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 10), காலை 9:30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, கோவை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இன்று காலை 9:30 மணிக்கு சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, ஆன்லைன் வழியில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்ச்சி பெற்ற, பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் உள்ளிட்ட, 13 பேர் கொண்ட குழு மூலமாக, ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.