UPDATED : செப் 29, 2025 08:13 AM
ADDED : செப் 29, 2025 08:19 AM
தமிழகத்தில், 125 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நுாலகர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நுாலகங்களின் பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி படிப்புகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான, மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். ஏற்கனவே, அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 7,000க்கும் அதிகமாக காலியாக உள்ளன.
இப்பணியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், 50 சதவீத அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள்; 95 கல்லுாரிகளில், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த வரிசையில் மொத்தமுள்ள, 180 அரசு கல்லுாரிகளில், 125ல் நுாலகர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக, ஒவ்வொரு அரசு கலை, அறிவியல் கல்லுாரியிலும், பொது நுாலகம் மற்றும் அதனுடன் இணைந்த துறை நுாலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை பராமரிக்க, நுாலகர் ஒருவர் செயல்படுவார். கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் படிப்புகளுக்கு தேவையான குறிப்புகளையும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுக்கு தேவையான விபரங்களையும், நுாலகத்தில் உள்ள புத்தகங்களில் இருந்து தான் பெற்றுக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு புத்தகத்தையும் பாதுகாக்க வேண்டியது நுாலகர்களின் பணி. தற்போது, 125 அரசு கல்லுாரிகளில் நுாலகர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், துறை சார்ந்த பேராசிரியர்கள், தங்களின் பாட வகுப்புகளை தவிர்த்து, மீதமுள்ள நேரங்களில் நுாலகங்களை கவனித்து வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியரின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன.
இதுகுறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள நுாலகர் பணியிடங்கள் காரணமாக, பேராசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை தயார் செய்வதிலும், சுணக்கம் நீடித்து வருகிறது. தமிழக அரசு உடனடியாக, நுாலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கணக்கெடுப்பு நுாலகர் காலி பணியிடங்கள் தொடர்பாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நுாலகர் காலி பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. டி.என்.பி.எஸ்.சி. எனும் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டு, காலியியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.