1,26,130 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை... வழங்க திட்டம்! தாய்மார்கள் அச்சமில்லாமல் பங்கேற்க அறிவுரை
1,26,130 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை... வழங்க திட்டம்! தாய்மார்கள் அச்சமில்லாமல் பங்கேற்க அறிவுரை
UPDATED : பிப் 12, 2026 02:26 PM
ADDED : பிப் 12, 2026 02:28 PM

பந்தலுார்:
நீலகிரி மாவட்டத்தில், 1 லட்சத்து 26 ஆயிரம் குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க நாளாக ஒவ்வொரு ஆண்டும், பிப்., 10 மற்றும் ஆக., 10 ஆகிய தேதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலம் இலவசமாக, 'அல்பெண்டசோல்' மாத்திரை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கும், குடற்புழுக்களை நீக்குவது இதன் நோக்கமாகும்.
ஊட்டச்சத்து நிலை உயரும்
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரையாகவும், ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் வழங்கப்படும். இதன் மூலம் ஊட்டச்சத்து நிலை உயர்ந்து, கற்றல் திறன் மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சியாக இது உள்ளது. மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தலைமையில் இந்த முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொ) பாலுசாமி கூறியதாவது:
ஒன்று முதல், 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லுாரிகளில், 486 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள், 416 ஆஷா பணியாளர்கள் மூலம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில், நேரடியாக வழங்கப்படுகிறது.
1,26,130 குழந்தைகளுக்கு பயன் இதன் மூலம் 1,26,130 குழந்தைகளும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் அல்லாத, 50,456 பெண்களும் இதன் மூலம் பயன் பெறுவர்.
இந்த மாத்திரையை உட்கொள்வதால் குடல் புழு நீக்கம் செய்யப்படுவதுடன், ரத்தசோகை நீங்கி, நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படவும் வழி ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
எந்த அச்சமும் தேவையில்லை
பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடந்த, முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறுகையில், “தற்போதைய சூழலில் பெரும்பாலான குழந்தைகள், முறையாக உணவு உட்கொள்ளாமல் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுகின்றனர். அதே போல் சரியாக கைகளை கழுவாமலும், இறைச்சி போன்ற உணவுகளை நன்றாக வேக வைக்காமல், உட்கொள்வதாலும் உடலில் புழுக்கள் பரவி, குடல் மற்றும் ஈரல் பகுதிகளை பாதிக்க செய்யும். குழந்தைகள் எந்த அச்சமும் இன்றி இந்த மாத்திரைகளை உட்கொள்வதுடன், கைகளை சுத்தமாக கழுவுதல், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார்.

