மாணவர்களிடம் நல்ல பண்புகளை வளர்க்கும் ரோட்டரி சங்கத்தின் நேர்மை அங்காடி
மாணவர்களிடம் நல்ல பண்புகளை வளர்க்கும் ரோட்டரி சங்கத்தின் நேர்மை அங்காடி
UPDATED : பிப் 12, 2026 02:28 PM
ADDED : பிப் 12, 2026 02:30 PM

புதுச்சேரி:
மாணவர்களிடம் நல்ல பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில் 'நேர்மை அங்காடி' என்ற புதுமை திட்டத்தை பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பள்ளி வளாகங்களில் 'நேர் மை அங்காடி' திறக்கப்படும். இங்கு புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், பேப்பர் போன்றவை விற்கப்படும். ஆனால், கடையில் விற்பனையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கடைக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம். அதற்குரிய பணத்தை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் செலுத்திவிட்டு செல்ல வேண்டும்.
பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், 4 இடங்களில் 'நேர்மை அங்காடி' திறக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மூலக்குளத்தில் உள்ள பில்லா பாங் பள்ளியில் 'நேர்மை அங்காடி' நேற்று திறக்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பரிமளம் தலைமை தாங்கினார்.
மண்டலம் நான்கின் துணை கவர்னர் அருண் தீப்பாஞ்சான், ஓவியர் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திட்டமிடல் குழு தலைவர் தாமஸ் ஆரோக்கியராஜ், நேர்மை அங்காடியை திறந்து வைத்தார். திட்டத் தலைவர் ஜெயக்குமரன், முன்னாள் தலைவர் தேவராஜ், பொருளாளர் உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் பரிமளம் கூறுகையில், 'இளம் வயதிலேயே பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், 'நேர்மை அங்காடி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 'நேர்மை அங்காடி' விற்பனை மூலம் கிடைக்கும் தொகை போலியோ ஒழிப்பு திட்டத்துக்கு செலவிடப்படுகிறது' என்றார்.

