அரசு கலைக்கல்லுாரியில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை
அரசு கலைக்கல்லுாரியில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை
UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 09:47 AM

கோவை :
மாநில அரசு 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், கோவை அரசு கலைக் கல்லுாரியில் ஒதுக்கப்பட்டுள்ள 238 இடங்களில், 100 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். 138 காலியிடங்கள் உள்ளன.
அரசு கலைக் கல்லூரியில் உள்ள இளநிலைப் பிரிவுகளில், 23 துறைகள் உள்ளன. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, 1,433 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, மே இறுதி வாரத்தில் நடத்தப்பட்டது.
ஜூன் 10 முதல் 15 வரை துறைவாரியான பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஜூலை 3ம் தேதி துவங்கப்பட்டன.
இந்நிலையில், 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணை, ஜூன் இறுதியில் மாநில அரசால் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு கலைக் கல்லுாரியில், 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை பணி, கடந்த திங்கள்கிழமை துவங்கியது. இக்கல்லூரியில், 238 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 100 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்; 138 காலியிடங்கள் உள்ளன.
கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், 20 சதவீத கூடுதல்மாணவர் சேர்க்கை, கடந்த திங்கள்கிழமை துவங்கியது. கல்லுாரியில், 238 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் நாளில், 68 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்ட நிலையில், இதுவரை 100 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 138 காலியிடங்கள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.