UPDATED : மார் 07, 2026 11:38 AM
ADDED : மார் 07, 2026 11:40 AM

திறன் மேம்பாடு
மாநில அரசு சார்ந்த தொழிற் பயிற்சி மையங்கள், கே.ஜி.டி.டி.ஐ.,கள், கே.எஸ்.டி.ஏ., மற்றும் ஜே.டி.எஸ்.,களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 1,386 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு தொழிற்பயிற்சி மையங்களை, மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள், தொழிலதிபர்களின் ஒருங்கிணைப்பில், ஹப் அண்டு ஸ்போக் போன்று கிளஸ்டர்களாக தரம் உயர்த்தப்படும். 2026 - 27ம் ஆண்டு இரண்டு கிளஸ்டர்கள் அமைக்க, 241 கோடி ரூபாய் செலவிப்படும்.
கலபுரகி மற்றும் மைசூரில் தலா, 16 கோடி ரூபாய் செலவில், 'ஷ்னெய்டர் எலக்ட்ரிக் யூத் இம்பாக்ட் சென்டர்'கள் அமைக்கப்படும். இதனால், ஆண்டுக்கு 2,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும்.
ஐ.டி.ஐ.,யில் படித்த மாணவியருக்கு, தொழில் நிறுவனங்களில் அதிகமான வேலை வாய்ப்பு உள்ளது. ஐ.டி.ஐ.,க்களில் மாணவியர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், ஆண்டு தோறும், 2,000 ரூபாய் கல்வி கட்டண சலுகை அளிக்கப்படும்.
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, கூடுதலாக இரண்டு பாடங்களை கற்றுத்தருவதன் மூலம், அவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும்.
கொப்பாலில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் செலவிடப்படும்.
மாவட்ட அளவில் தேவைக்கு தகுந்தார் போன்று, திறன் மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வீதம், 'சேலஞ்ச் நிதி' ஒதுக்கப்படும். இந்த நிதி உள்ளூர் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பணி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண பயன்படும்.
கர்நாடக திறன் மேம்பாட்டு ஆணையம் சார்பில், கர்நாடக டிஜிட்டல் அகாடமி மிஷனுடன் ஒருங்கிணைந்து, கர்நாடக திறன் மேம்பாடு மற்றும் செயல் திறன் மையம் அமைக்கப்படும்.
அனைத்து திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் சேவைகளை, ஒரே கூரையின் கீழ் கொண்டு வர, இரண்டு கோடி ரூபாய் செலவில், 'ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு இணையதளம்' அமைக்கப்படும்.
கிராமப்புறங்களில் முதியோர் நலன் மேம்பாட்டுடன், குழந்தை பிரசவித்த பெண்களை பராமரிக்க வசதி தேவைப்படுகிறது. இதை மனதில் கொண்டு, சுய உதவிக்குழு பெண்களுக்கு, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமாக திறன் பயிற்சி அளிக்கப்படும்.
2026ம் ஆண்டு, 'சர்வதேச விவசாய பெண்கள்' ஆண்டாக கொண்டாடப்படுவதால், 5,000 விவசாய பெண்களுக்கு, அதிநவீன விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
நகர்ப்பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு, பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்க, ஆய்வு நடத்தப்படும். அவர்களுக்கு அடையாள அட்டைகள், விற்பனை சான்றிதழ் வழங்க கமிட்டிகள் அமைக்கப்படும். இதற்காக ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

