மாணவரே இல்லாத 8,000 பள்ளிகளில் வேலை பார்க்கும் 20,000 ஆசிரியர்கள்
மாணவரே இல்லாத 8,000 பள்ளிகளில் வேலை பார்க்கும் 20,000 ஆசிரியர்கள்
UPDATED : அக் 27, 2025 10:23 AM
ADDED : அக் 27, 2025 10:23 AM

புதுடில்லி:
கடந்த கல்வியாண்டில், நாடு முழுதும் 7,993 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் புதிதாக சேராத நிலையில், அங்கு 20,817 ஆசிரியர்கள் பணியில் இருந்தது கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில் நடந்த மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக, சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் ஆய்வு நடத்தியது.
3,812 பள்ளிகள்
இது, தொடர்பான தகவல்களை தங்கள் இணையதளத்தில் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 - 24ம் கல்வியாண்டி ல், நாடு முழுதும் 12,954 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் புதிதாக சேரவில்லை. கடந்த கல்வியாண்டில், இது குறைந்து 7,993 பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை.
இருப்பினும், இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த விவகாரத்தில், மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக, இங்குள்ள 3,812 பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் சேரவில்லை. அதேசமயம், 17,965 ஆசிரியர்கள் இங்கு பணியில் உள்ளனர்.
இரண்டாவதாக தெலுங்கானாவில் 2,245 பள்ளிகளில் புதிதாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. இங்கு, 1,106 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
மூன்றாவதாக மத்திய பிரதேசத்தில், 463 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்காத நிலையில், அங்கு 223 பேர் வேலை செய்கின்றனர். குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில், 81 பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில், புதிய மாணவர் சேர்க்கை இல்லை.
ஹரியானா, மஹாராஷ்டிரா, கோவா, அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, டில்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
நாடு முழுதும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் 1 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில், 33 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஆந்திராவில் அதிகம் இதில், அதிகளவு பள்ளிகள் ஆந்திராவில் உள்ளன. அதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவுகள் உள்ளன. ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை பொறுத்தவரை, உத்தர பிரதேசத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
அடுத்தபடியாக, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒற்றை ஆசிரியர் இருக்கும் பள்ளியில் மாணவர்கள் அதிகப்படியாக சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

