UPDATED : ஆக 15, 2025 12:00 AM
ADDED : ஆக 15, 2025 10:28 AM
 ஓசூர்:
 பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட, அரசு பள்ளி மாணவ - மாணவியர் 22 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே, கே.என்.தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 197 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சின்னசாமி உள்ளார். பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவ - மாணவியர், 22 பேர் வாந்தி எடுத்து மயங்கினர்.
அனைவரையும் பேரிகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரிய அளவில் பிரச்னை ஏதுமில்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
காலை உணவு திட்டத்திற்கு செய்த சாம்பாரில் பல்லி விழுந்ததும், அதை கவனிக்காமல் மதிய உணவில் ஊற்றி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும் தெரிந்தது. சத்துணவு அமைப்பாளர் பாரதி, சத்துணவு உதவியாளர் சரசம்மா, ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

