UPDATED : ஆக 04, 2025 12:00 AM
ADDED : ஆக 04, 2025 09:02 AM
கோவை:
கோவை மாவட்டத்தில், 22 மாணவர்களுக்கு, 2.32 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு வங்கிகளில் கல்வி கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. 16 வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. உடனடி சேர்க்கைக்காக, 20 கல்லுாரிகளும் அரங்குகள் அமைத்திருந்தன.
கல்வி கடன் கேட்டு, 300 மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர். அவர்களது விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை வங்கி அலுவலர்கள் பரிசீலித்தனர். முகாமில், 49 மாணவர்கள் உயர்கல்விக்காக உடனடியாக கல்லுாரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 22 மாணவர்களுக்கு, ரூ.2.32 கோடிக்கு கல்வி கடனுதவியை எம்.பி., ராஜ்குமார் மற்றும் கலெக்டர் இணைந்து வழங்கினர்.
கடந்த, 2024-25 கல்வியாண்டில், கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, அரசின் இட ஒதுக்கீட்டில், நீலகிரி மருத்துவக் கல்லுாரியில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவன் ராஜேஷ்-ஐ, எம்.பி., மற்றும் கலெக்டர் பாராட்டினர். துணை கலெக்டர் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், சமக்கர சிக்சா கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி பங்கேற்றனர்.

