மாணவர் சேர்க்கை இன்றி மூடப்பட்ட 25 பள்ளிகள்? நடவடிக்கை எடுப்பதாக கல்வி துறை உறுதி
மாணவர் சேர்க்கை இன்றி மூடப்பட்ட 25 பள்ளிகள்? நடவடிக்கை எடுப்பதாக கல்வி துறை உறுதி
UPDATED : ஆக 14, 2025 12:00 AM
ADDED : ஆக 14, 2025 08:53 AM

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில், 25 அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகளை இயக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை என, 280 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில், பல பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.
ஒரு மாணவன் முதல், ஐந்து மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் கூட உண்டு. அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
25 பள்ளிகள் பூஜ்ஜியம் எண்ணிக்கை இந்நிலையில், ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் குறித்து பள்ளி கல்வி துறை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. அதில், நீலகிரியில், 25 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனது தெரியவந்தது.
அப்பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, செயல்படாமல் உள்ளன. இதற்கு, கொரோனா சமயங்களில் பொருளாதார நெருக்கடியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனா முடிந்த பின், மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுத்து தான் காரணம் என கூறப்படுகிறது.
மலை மாவட்டத்தை பொறுத்த வரை பழங்குடியினர், கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளியை நம்பிதான் இருந்தனர். ஆனால், காலபோக்கில் ஆங்கில மோகத்தால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாக, தெரியவந்துள்ளது.
இதனால் தான், 25 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை பூஜ்ஜியமானது எனவும் கூறப்படுகிறது. அப்பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், இப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என கல்வி துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் திறக்க நடவடிக்கை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை, பூஜ்ஜியம் எண்ணிக்கை காரணமாக, 25 அரசு பள்ளிகள் இயங்குவதில்லை.
அடுத்தாண்டில் மாணவர்கள் சேர்க்கை இருந்தால், அப்பள்ளிகளை மீண்டும் திறந்து செயல்படும். மாணவர் சேர்க்கையில் பூஜ்ஜியம் எண்ணிக்கையால் இது போன்ற நிலை சில நேரங்களில் ஏற்படும். கிராமப்புற மாணவர்களை பள்ளியில்சேர்க்கும் நடவடிக்கையில் ஆசிரியர்கள் ஈடுபடஉள்ளனர், என்றார்.