UPDATED : ஆக 14, 2025 12:00 AM
ADDED : ஆக 14, 2025 09:08 AM

சென்னை:
பள்ளிகளில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து பள்ளிகளிலும், சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து, தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து, விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் வகை தேசிய கொடிகளை, கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது. இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.