வாழ்க்கையை அனுபவித்து, விட்டுக்கொடுத்து வாழுங்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையா அட்வைஸ்
வாழ்க்கையை அனுபவித்து, விட்டுக்கொடுத்து வாழுங்கள் பேராசிரியர் சாலமன் பாப்பையா அட்வைஸ்
UPDATED : மார் 06, 2026 01:27 PM
ADDED : மார் 06, 2026 01:30 PM

மதுரை:
“வாழ்க்கையை அனுபவித்து, விட்டுக்கொடுத்து வாழுங்கள்,” என, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் அதன் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு தலைமையில் நடந்த 32வது ஆண்டு விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
அவர் பேசியதாவது:
“இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற பாரதியாரின் கூற்றுக்கு ஏற்ப வாழ்வை அனுபவித்து வாழுங்கள். இறந்தபின் சொர்க்கம் சேர நினைப்பதில் தவறில்லை. இப்பூமி நம் கண் முன் காணக் கிடைத்த சொர்க்கம். அதனை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நினைத்தவாறு வாழ்க்கை அமையாது. ஏதோ ஓரிடத்தில் சரணடைய நேரிடும். அவ்வாறு நேரிட்டால் 'கடவுளுக்கு தொண்டு செய்யுங்கள்' என சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். ஏழை, அனாதைகளின் இதயத்தில் கடவுள் இருப்பதால் அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
'நமக்கு மேல் இருப்பவன் ஒருவன். அவனை பலரும் பல பெயர்களால் ஆராதனை செய்கின்றனர்' என ரிக் வேதம் கூறுகிறது. கடவுளை தேடும் அதே வேளையில், மனிதர்களிடையே அன்பு செலுத்துங்கள்.
இன்றைய தலைமுறையினர், வாழ்வை அனுபவிக்க தெரியாமல் சிறு கோபம் வந்தாலும் கோர்ட்டுக்கு செல்கின்றனர். இம்மண்ணில் அனுபவிக்காமல் வேறு எங்கு அனுபவிக்க போகிறீர்கள்.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை
என்கிறார் திருவள்ளுவர். விரும்பியவர்களிடத்தில் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள். ஆனால் கற்பதை மாணவர்களும், கற்பித்தலை ஆசிரியர்களும் விட்டுக் கொடுக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கல்லுாரி முதல்வர் சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார். 2022 - 2025ம் ஆண்டு பயின்ற மாணவர்களில் துறை வாரியாக தேர்வு செய்யப்பட்ட 9 மாணவர்களுக்கு 'சிறந்த மாணவர்களுக்கான விருதை' பேராசிரியர் சாலமன் பாப்பையா, கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு வழங்கினர்.
பேராசிரியர்கள், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை துணை முதல்வர் குரு பாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியர்கள் அனுராதா, பத்மாவதி, பிரபு, வைரமுத்து, நிர்வாக அதிகாரி லட்சுமணன் செய்திருந்தனர்.

