'தினமலர் ‛பட்டம்' வினாடி - வினா திறமையால் அசத்திய மாணவியர்
'தினமலர் ‛பட்டம்' வினாடி - வினா திறமையால் அசத்திய மாணவியர்
UPDATED : அக் 24, 2025 08:17 AM
ADDED : அக் 24, 2025 08:18 AM
கோவை:
கோவை சித்தாபுதுார் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா விருது நிகழ்ச்சியில், மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்', இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று, சித்தாபுதுார், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. முதற்சுற்று எழுத்து தேர்வில், 145 மாணவியர் பங்கேற்றனர். இரண்டாவது சுற்றுக்கு, எட்டு அணிகளை சேர்ந்த 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'எச்' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியர் காவ்யா, கன்னிகா பரமேஸ்வரி வெற்றி பெற்றனர்.இவர்களுக்கு கேடயம், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன் 'டி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சுவேதா, ஏழாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி, 'பி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் ஜெனிலா பிரின்சி, திஷா, 'எப்' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் அருள்செல்வி, பவித்ரா, 'ஏ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சுர்த்தா ஸ்ரீ, ஸ்ரீ பிருந்தா ஆகியோர், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்களுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி, ஆசிரியை எமிலி சோபினா ஆகியோர் பரிசு வழங்கினர். தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இப்போட்டி நடத்தப்பட உள்ளது. நாட்டு நடப்புகள், நவீன தொழில்நுட்பம், அரிய செய்திகள் போன்றவை, இதன் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது என, பங்கேற்ற மாணவியர் தெரிவித்தனர்.

