UPDATED : அக் 19, 2025 09:22 AM
ADDED : அக் 19, 2025 09:25 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜா கல்லுாரியில் இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது:
ககன்யான் திட்டத்திற்காக, இதுவரை, 80,000க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியுள்ளோம். தற்போது, இறுதி கட்டப்பணி நடக்கிறது. முதலில், மூன்று ஆளில்லா ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பி முழுமையாக சோதனை செய்த பின்பே, மனிதர்களை விண்வெளி பயணத்திற்காக அனுப்புவோம்.
மனிதர்களை அனுப்பும் போது, விண்வெளியில் திடீர் பிரச்னை ஏற்பட்டால், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க உதவும், 'க்ரூ எஸ்கேப் சிஸ்டம்' இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. 2027ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்.
கடல் சார்ந்த தகவல்களை தமிழில் வழங்கும் வகையில், 1,000க்கும் மேற்பட்ட மொபைல் பயன்பாடுகள், 'ஆப்'களை உருவாக்கியுள்ளோம். உலகளவில் ராக்கெட்டுகளை வணிக பயன்பாட்டிற்கு அனுப்புவதில், தற்போது இந்தியாவின் பங்கு 2 சதவீதம் உள்ளதை 10 சதவீதமாக உயர்த்துவதே நம் இலக்கு.
இதற்காக தற்போது, 10,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்து செல்லும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம்; மேலும் 40,000 கிலோ எடைக்கு ஏற்ற ராக்கெட்டுகளை தயாரிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதற்கு தேவையான பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.