கல்லுாரியில் விடுதி இல்லாததால் டி.சி., வாங்கிய 40 மாணவர்கள்; சேர்க்கையும் சரிவு
கல்லுாரியில் விடுதி இல்லாததால் டி.சி., வாங்கிய 40 மாணவர்கள்; சேர்க்கையும் சரிவு
UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 08:43 AM

வால்பாறை:
வால்பாறையில் கடந்த, 2006ல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. 2020ல் அரசு கலைக்கல்லுாரியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். சமீப காலமாக, மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் சரிந்து கொண்டே வருகிறது.
தற்போது, பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ், 750 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த கல்வியாண்டில், 520 இளங்கலை மாணவர்களுக்கான இடங்களில், இது வரை, 205 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதில், உள்ளூர் மாணவர்களை விட வெளியூர் மாணவர்கள் தான் அதிகம் சேர்ந்துள்ளனர். விடுதி வசதி இல்லாததால் வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேர தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், ஆண்டு தோறும் கல்லுாரியில் சேர்க்கை சரிந்து வருகிறது.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
வால்பாறையில் மக்கள் தொகையும் ஆண்டு தோறும் சரிந்து வருவதால், அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கையும் சரிந்து வருகிறது. கல்லுாரியில் மாணவிகளுக்கு விடுதி வசதி உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை.
இதனால் தொலை துார பகுதியில் வசிக்கும் மாணவர்கள் தற்காலிகமாக கல்லுாரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு, மொத்தம், 13,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மாணவர்கள் சேர்க்கைக்கு பின், விடுதி வசதி இல்லாததால், 40 பேர் மாற்றுச்சான்றிதழ் பெற்று சென்றனர். எனவே வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் வகையில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.