UPDATED : ஜன 29, 2026 09:44 AM
ADDED : ஜன 29, 2026 09:45 AM

சென்னை:
ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீதத்தை குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்வு, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60; மற்ற பிரிவினர், 55 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இந்நிலையில், மற்ற மாநிலங்களை போல், தமிழகத்திலும், தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணில், 5 சதவீதத்தை குறைக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். இதை ஏற்ற பள்ளிக் கல்வி துறை, தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதத்தை குறைத்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு, 50 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு 40 சதவீதமும் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலரது பணிக்கு உத்தரவாதம் ஏற்படும்.
