அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 5.45 லட்சம் வாசிப்பு புத்தகம்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 5.45 லட்சம் வாசிப்பு புத்தகம்
UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 04:54 PM

கோவை:
அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை, 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் வாசிப்பின் மூலம் சமூக சிந்தனையை ஊக்குவிக்கவும், உணர்வுகளை வெளிக்கொணரவும் நுழை, நட, ஓடு, பற என்ற நிலைகளில் கதைப் புத்தகங்களை உருவாக்கி, வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, 2025-26 கல்வியாண்டுக்காக 51 தமிழ் வழி புத்தகங்களும், 30 ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகங்களும் என மொத்தம் 81 புத்தகங்கள் அச்சடித்து, அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்திற்கு மட்டும் 5,45,958 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதில், நுழை பிரிவில், குட்டிச் சுண்டெலி, என் ஆட்டுக்குட்டி எங்கே உள்ளிட்ட 44 புத்தகங்கள்; நட பிரிவில், கொட்டாங்குச்சி இட்லி, என் நண்பர்கள் எங்கே உள்ளிட்ட 12 புத்தகங்கள்; ஓடு பிரிவில்,பனை சொன்ன கதை உள்ளிட்ட 13 புத்தகங்கள்; பற பிரிவில், 11 புத்தகங்கள்; பாடல் பிரிவில் 1 புத்தகம் உள்ளது. கடந்த கல்வியாண்டில் 123 புத்தகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகளுக்கு மட்டும்வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன. இவை, அரசு பள்ளிகளுக்கு பிரிவு வாரியாகவும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு, வகுப்புவாரியாகவும் வழங்கப்படவுள்ளன.
பயனுள்ளதாக இருக்கும்
திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நுழை, 3ம் வகுப்பில் இருந்து நட, 5ம் வகுப்பில் இருந்து ஓடு, 6ம் வகுப்பில் இருந்து பற ஆகிய பாடல் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இப்புத்தகங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரியநாயக்கன்பாளையம் வட்டார மையத்தில் மட்டும் செயல்பட்ட இத்திட்டம், கடந்த ஆண்டு முதல் எஸ்.எஸ்.குளம், பேரூர் உள்ளிட்ட,15 வட்டார மையங்களில் செயல்படுத்தப்படுகிறது என்றார்.