'மனிதநேய' மாணவர்கள் 6 பேர் மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி
'மனிதநேய' மாணவர்கள் 6 பேர் மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி
UPDATED : ஆக 09, 2026 12:41 PM
ADDED : ஆக 09, 2026 12:42 PM
சென்னை:
மத்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் பணிக்கான நேர்முகத் தேர்வில், மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஆறு பேர், தேர்ச்சி பெற்றனர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான சைதை துரைசாமி, ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் வழியே, பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இலவச பயிற்சிகள் வழங்கி வருகிறார்.
யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு ஆக., 3ல் மத்திய ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், அக்., 10ல் வெளியாகின.
தொடர்ந்து, மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில், நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்த 26 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேர்முகத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், மனித நேய கட்டணமில்லா கல்வியகத்தில், நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்ற ஆறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தேசிய அளவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த, டிக்சன் சாமுவேல் 62; கோவை சஞ்சய் 75; மயிலாடுதுறை பிரகாஷ் 147; ராணிப்பேட்டை ஸ்ரீநிவாஸ் 198; திருநெல்வேலி சூரியராஜ் 282 மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி 326வது இடங்களை பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைவரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
