ரூ.60 லட்சத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மையம் வேலைவாய்ப்புக்கு இலவச பயற்சி
ரூ.60 லட்சத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப மையம் வேலைவாய்ப்புக்கு இலவச பயற்சி
UPDATED : ஜன 28, 2026 12:32 PM
ADDED : ஜன 28, 2026 12:34 PM

குன்னுார்: குன்னுாரில் டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளுக்காக இலவச பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரியில் 'மைக்ரோ லேண்ட்' அறக்கட்டளை சார்பில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 'டேட்டா சயின்ஸ்' வசதி மேம்படுத்தும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் துவங்கப்பட்டது. 70 கம்ப்யூட்டர்களுடன் உள்கட்டமைப்பு வசதிகளுடன், பயிற்சி மையம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஹால் துவக்க விழா நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் கற்றல் மாணவர்கள் கல்வி அணுகுமுறையை மாற்றி அமைக்கும். பாடத்திட்டங்களை தாண்டி, செய்முறை விளக்கம், நேரடி அனுபவத்தில் கற்கும் போது, தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கு தயார்படுத்துகிறது. இது நீலகிரி மாணவர்களின் வருங்காலத்தை சிறப்பாக அமைக்கும்,” என்றார்.
அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் கல்பனா கர் பேசுகையில், “நீலகிரியில், நீண்டகால அடிப்படை கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவது அவசியம். அறக்கட்டளை சார்பில் சமூகத்தின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. புவியியல் அமைப்பு, கல்விக்கான தடையாக இருக்க கூடாது என்பதன் அடிப்படையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த இலவச பயிற்சி மையமாக செயல்படும். இதில், நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நேரலையில் கலந்துரையாடி ஆலோசனைகளை பெறலாம்,” என்றார். கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா வரவேற்றார். அறக்கட்டளை அலுவலர் அலோக் நன்றி கூறினார்.

